Sunday, May 1, 2011

சோனியா நம் நாட்டுக்கு தேவையா என்று தாராளமாக யோசிக்கலாம்.


இது 02 மே 2011 தினமணியில் வந்த திரு. குருமூர்த்தி அவர்களின் கட்டுரை.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள சோனியா ஊழல் எதிர்ப்பாளரானார்! - எஸ். குருமூர்த்தி

நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது.
 யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

 அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.
 ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை.
 அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.
 ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.
 ""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று.
 ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.
 யார் இந்த கிளியோ பாஸ்கல்?
 சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.
 அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.
 ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.
 இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.
 2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.
 கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணையதள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.
 "கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.
 சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.
 1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.
 எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.
 காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.
 நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.
 போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.
 போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.
 இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.
 அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
 ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.
 சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.
 1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.
 1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
 அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
 பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.
 உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.
 உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.
 சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.
 இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.
 அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது.
 இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகிவிட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், ""ஆ, சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்.
 ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹஸôரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.
 சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.
 சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.
 அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.
 கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.
 இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்: ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.

Monday, February 7, 2011

மதுரை முத்து


இந்த கட்டுரை தினமணி சிறுவர்மணி இணைப்பிதழில் வந்தது. என்னுடைய முதல் பதிவாக இதை பரிந்துரைக்கிறேன்.
மே தினம் மறக்கக் கூடாத வரலாறு

First Published : 01 May 2011 12:00:00 AM IST

இப்போதெல்லாம் அரைத் தூக்கத்தில் எழுந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு ஓடுகிறோம். அப்பாவும், பல வீடுகளில் அம்மாவும் மற்றொரு பக்கம் வேலைக்கு ஓடுகிறார்கள். மாலையில் அனைவரும் களைத்துப்போய்விடுகிறோம். ஆனால் அம்மா மட்டும் வேலைக்குச் சென்று வந்தாலும்கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்கிறார்கள். தொடர்ந்து அவர்கள் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்க மனித உழைப்புதான் காரணமாக இருக்கிறது.
ஆனால், ஒருவர் எதற்காக உழைக்கிறார்? மகிழ்ச்சியாக வாழ்வதற்காக! ஆனால், நாள் முழுக்க உழைத்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மகிழ்ச்சி எப்படிக் கிடைக்கும்?
ஆனால், அப்பாவுக்கும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கும் எட்டு மணி நேரம்தான் வேலை. பெரும்பாலான நிறுவனங்களில் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை நேரம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதற்கேற்பதான் ஊதியமும் தரப்படுகிறது. இந்த எட்டு மணி நேர வேலை என்பதும், அதற்கேற்ற ஊதியம் என்பதும் எங்கே, எப்போது, எதற்காக, எப்படி நிர்ணயிக்கப்பட்டது?
இதற்குப் பின்னே ஒரு பெரிய கதை இருக்கிறது. மிக முக்கியமான வரலாறு அது. அதுதான் தொழிலாளர் தினமான மே தின வரலாறு!
1880 - ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் தொடங்கி, 1890 - ஆம் ஆண்டு பாரீசில் உருவானதுதான் மே தினம். அல்லது, உலகத் தொழிலாளர் தினம். அதாவது மே 1. இது பள்ளி விடுமுறைக் காலத்தில் வருவதால் பலரும் இந்த நாளைப் பற்றிப் பெரிதாக யோசிப்பதில்லை. மற்ற விடுமுறை நாட்களைப்போல இதுவும் ஒரு விடுமுறை நாள் என்று நாம் நினைத்துவிடக்கூடாது. மனித நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள் முற்காலத்தில் 18 மணி நேரம் வேலை வாங்கப்பட்டனர். இதை எதிர்த்து தாங்கள் உழைக்க வேண்டிய நேரத்தை 8 மணி நேரமாக வரையறுத்து, அதற்காக போராடி அந்த உரிமையைப் பெற்ற நாளே மே தினம்!
இயற்கை தருவதைத் தவிர மற்ற அனைத்தும் மனிதர்களின் கூட்டு உழைப்பின் மூலம் உருவாவதுவே ஆகும். ஒரு பொருளை உற்பத்தி செய்யும் அடிப்படை மூலதனம் என்ன தெரியுமா? பல மனிதர்களின் கூட்டு உழைப்புதான். ஆனால், 18 - ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மேற்கு நாடுகளில் ஒரு கொடுமையான வழக்கம் இருந்தது. நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரமும், சில சமயங்களில் 20 மணி நேரமும் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (இட்ஹழ்ற்ண்ள்ற்ள்) இதற்கு எதிராகப் போராடியது. நாளொன்றுக்கு பத்து மணி நேரம் வேலை செய்யும் உரிமை தொழிலாளர்களுக்கு வேண்டும் என்பதுதான் அந்த இயக்கத்தின் கோரிக்கை.
1832 - ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பாஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதுபோல, பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், ரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. இந்த தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் கூட்டமைப்பு (ஃபெடரேஷன் ஆஃப் ஆர்கனைஸ்டு டிரேடர்ஸ் அண்ட் லேபர் யூனியன்ஸ்) 1884 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இந்தக் கூட்டமைப்பு "எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன் வைத்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தொடர்ச்சியாக இயக்கங்களையும் நடத்தியது. இது மிகப் பெரிய தொழிலாளர் ஒற்றுமைக்கு வழி வகுத்தது. கறுப்பு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டதன் பின்னணியிலேயே இந்த இயக்கம் வலுப்பெற்றது. அதற்கு முன்பு கறுப்பு அடிமைகள், தாங்கள் இறக்கும்வரை ஒரு எஜமானனின் கீழ் உழைத்து ஒடுங்கித் துன்புற்று வாழவேண்டியிருந்தது.
(மாமேதை கார்ல் மார்க்சின் "மூலதனம்' என்னும் உலகப் புகழ் பெற்ற நூல் 1867 - ஆம் ஆண்டு வெளியானது. இது பொருளாதாரச் சித்தாந்தம் குறித்த நூலாகும். இந்த நூலில், எட்டு மணி நேர உழைப்பைக் கோரும் இயக்கத்தைப் பற்றி "வேலை நாள் குறித்து' என்னும் தலைப்பில் மார்க்ஸ் எழுதியுள்ளார்).
அத்துடன் அந்தக் கூட்டமைப்பு, மே 1, - 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்குக் காரணமாகும்.
1886 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிகாகோ நகரில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கலந்துகொண்ட மே தின இயக்கம் தொடங்கியது. பிறகு, தொழில் நகரங்களான சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், பிலடெல்பியா, மில்வாக்கி, சின்சினாட்டி, பால்டிமோர், பிட்ஸ்பர்க், டெட்ராய்ட் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த எழுச்சி மிக்க வேலை நிறுத்தத்தால் அமெரிக்காவில் உள்ள பெரிய நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் போக்குவரத்து தடைபட்டது. தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின.

சிகாகோ பேரெழுச்சி

"மெக்கார்மிக் ஹார்வெஸ்டிங் மெஷின்' என்பது ஒரு தொழில் நிறுவனம். 1886 - ஆம் ஆண்டு மே 3 - ஆம் நாளன்று இந்த நிறுவனத்தின் வாயிலில் 3000 -த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டனர். கண்டனக் கூட்டம் நடத்தினர். "சிகாகோ கமர்ஷியல் கிளப்' என்பது முதலாளிகள் சங்கம். இந்தச் சங்கம், தொழிலாளர்களின் போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை முறியடித்தே ஆகவேண்டும் என்று தீவிரமாகச் செயல்பட்டது. முதலாளிகள் சங்கம் இரண்டாயிரம் டாலர்கள் செலவு செய்து இயந்திரத் துப்பாக்கிகளை வாங்கியது. இந்தத் துப்பாக்கிகளை "இலினாய்ஸ் தேசியப் படை'யிடம் கொடுத்து, வேலை நிறுத்தத்தை ஒடுக்குமாறு கேட்டுக்கொண்டது. முதலாளிகள் சங்கத்தின் தூண்டுதலின் காரணமாக இலினாய்ஸ் தேசியப் படையினர் தொழிலாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் நான்கு தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
"அனார்க்கிஸ்ட்' என்பது ஒரு தொழிலாளர் அமைப்பு. இந்த அமைப்பு, தொழிலாளர்கள் மீது இலினாய்ஸ் தேசியப் படை நடத்திய காட்டுத்தனமான தாக்குதலைக் கண்டிப்பதற்காக ஒரு கண்டனக் கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டம் மே 4- ஆம் தேதி, "ஹே மார்க்கெட் சதுக்கம்' என்னுமிடத்தில் நடந்தது. கண்டனக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடினர். கூட்டம் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது இலினாய்ஸ் தேசியப் படையைச் சேர்ந்த 180 பேர் வந்தார்கள். கலைந்து செல்லும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதனால், கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் கீழே இறங்கினார்கள். அப்போது திடீரென்று தேசியப் படையினர் மீது ஒரு குண்டு வீசப்பட்டது. அதில் ஒருவர் கொல்லப்பட்டார். 70 பேர் காயமடைந்தனர்.
கோபம்கொண்ட தேசியப்படையினர், தொழிலாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். தேசியப் படையினர் மீது குண்டு வீசியது யார் என்று எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அதைக் காரணம் காட்டி, தொழிலாளர் இயக்கத்தின் மீது அடக்கு முறை ஏவப்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை முன்னின்று நடத்திய அனார்க்கிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த எட்டுபேர் மீது, கொலை சதித் திட்டம் தீட்டியதாக வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றம் எந்த ஆதாரமும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து, தூக்குத் தண்டனையும் விதித்தது.
அனார்க்கிஸ்ட் தொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த தலைவர்களான, "ஆகஸ்ட் ஸ்பைஸ்', "ஆல்பர்ட் பார்சன்ஸ்', "அடால்ஃப் ஃபிஷர்', "ஜார்ஜ் ஏங்கல்' ஆகிய நான்குபேர் 1887 - ஆம் ஆண்டு நவம்பர் 11 - ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர். "லூயி லிங்க்' என்னும் இன்னொரு தலைவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
கொல்லப்பட்ட தொழிலாளர் தலைவர்களுக்கான இறுதி ஊர்வலம் 1887 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 - ஆம் நாள் நடந்தது. அந்த ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதிலுமிருந்து ஐந்து லட்சம் பேர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அதுமட்டுமின்றி அன்றைய தினம் அமெரிக்கா முழுதும் "கறுப்பு தினமாக' அனுசரிக்கப்பட்டது. சிறைபட்டிருந்த மற்ற மூன்று தலைவர்கள் 1893 - ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டனர்.
1888 - ஆம் ஆண்டு செயின்ட் லூயியில் அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு கூடியது. அப்போது எட்டு மணி நேர வேலை இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டது. அப்போது அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்தவர் "சாமுவேல் கோம்பர்ஸ்' என்பவர்.

அனைத்து நாடுகளிலும் மே தினம்

1889 - ஆம் ஆண்டு ஜூலை 14 - ஆம் நாள் அன்று, பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் "சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்' மாநாடு கூடியது. (இந்தக் கூட்டத்தை இரண்டாவது அகிலம் என்பார்கள்). இதில் பிரடெரிக் ஏங்கல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் சிகாகோ சதியை கடுமையாகக் கண்டித்தார்கள். கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணிநேரப் பணிக்கான போராட்டத்தைத் தொடர்வது என்றும், 1890, மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர் இயக்கங்களை நடத்த வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கப்பட்டது. உலகத் தொழிலாளர்கள் அனைவரும், எட்டுமணி வேலை நேரத்திற்காக போர்க்குரல் கொடுக்கவேண்டிய நாள் மே 1 என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமைக் கோரிக்கையும், அதற்கான இயக்கமும் வலிமை பெற்றன. நாளொன்றுக்கு எட்டுமணி நேரம் மட்டும் உழைக்கும் உரிமையும், வாரத்தில் ஒரு நாள் விடுமுறையும் உலகம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வரத் தொடங்கின. உழைக்கும் மக்களை உலகம் மனிதாபிமானத்தோடு பார்க்கக் கற்றுக்கொண்டது.
அமெரிக்கத் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ போராளிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக, உழைப்பாளர்களின் தினமாக நம் முன் நிற்கிறது. இப்படியாக, பொதுவுடைமைத் தத்துவத்திற்கு பெரும் எதிர்ப்பு காட்டி வரும் அமெரிக்காவில்தான் உழைப்பாளர்களின் அடிப்படை உரிமை முதன் முதலில் நிலைநாட்டப்பட்டது.
பெரும் போராட்டங்கள்தான் மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தன. இன்றைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தினமாக மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. "உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!' என்பதுதான் மே தினம் நமக்கு அளிக்கும் முழக்கமாகும்.
ஆனால், இந்த எட்டு மணி நேர உழைப்பு நிர்ணயம் என்பது பெரும்பாலும் படித்தவர்களுக்குத்தான் உதவுகிறது. அமைப்பு சாராத் தொழிலாளர்கள் எனப்படும் கல்லுடைக்கும் கொத்தடிமைகள், தோட்டத் தொழிலாளர்கள், ஆலை ஊழியர்கள், நெசவுத் தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தினக் கூலிகள் என கோடிக்கணக்கான மக்கள் இன்னமும் ஒரு வேளை உணவுக்காகவும், தங்கள் குடும்பத்திற்காகவும் பகலிரவாக உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
உங்களைப்போன்ற எத்தனையோ குழந்தைகள், பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு வாய்ப்பில்லாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள், டீ கடைப் பணியாளர்களாக, வீட்டு வேலை செய்பவர்களாக, ஹோட்டலில் மேசை துடைப்பவர்களாக, கட்டிட வேலைகளில் மண்ணும் கல்லும் சுமப்பவர்களாக எத்தனையோ கடுமையான வேலைகளைச் செய்துவருகிறார்கள். அவர்களது பெற்றோர்களுக்கு, அவர்களைப் படிக்க வைக்கக்கூடிய அளவு சம்பாத்தியம் இருப்பதில்லை. படிப்பு என்ன, தங்கள் பிள்ளைகளுக்குப் போதுமான உணவு கொடுப்பதற்குக்கூட முடியாத அளவில்தான் அவர்களது வருமானம் இருக்கிறது. அதனால்தான் அந்தச் சிறுவர்கள் வேலைக்கு வருகிறார்கள்.
இது எல்லோருக்குமான உலகம். எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? இந்த மே தினத்தில் நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கேள்வி இது!

http://dinamani.com/edition/Story.aspx?SectionName=Siruvarmani&artid=412109&SectionID=145&MainSectionID=145&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81